Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களில், 7 நாட்களில் 1,600 கி.மீ மோட்டார் சைக்கிள் சாகசப் பயணத்தை நாமக்கல் நகரைச் சேர்ந்த 2 இளம்பெண்கள் துவக்கினா்.
நாமக்கல் கங்கா நகரை சேர்ந்த சித்திக் பாட்ஷா, பானு தம்பதியினரின் மகள் ஆயிஷா (23). அவரது தோழி பெரம்பலூரைச் சேர்ந்த அபர்ணா (23). இவர்கள் இருவரும், தமிழகத்தில் உள்ள மலைப் பகுதிகளுக்கு, மோட்டார் பைக்கில் பயணம் மேற்கொண்டு, பெண்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டனர்.
இதையொட்டி கொல்லிமலை, ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல், உள்ளிட்ட, 15 மலைப் பகுதிகளுக்கு, 7 நாட்களில், 1,600 கி.மீ. தூரம் மோட்டார் பைக்கில் செல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்து, சாகசப் பயணம் துவக்க நிகழ்ச்சி, நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது திரளான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு அவர்களின் பயணம் வெற்றி பெற வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
இது குறித்து பைக் ரைடர் ஆயிஷா கூறியதாவது, பெண்களால், அனைத்து துறையிலும் சாதிக்க முடியும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கின்றனர் என்பதை வலியுறுத்தி நானும், எனது தோழியும், இந்த மோட்டார் பைக் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.
தமிழகத்தில் உள்ள கொல்லிமலை, ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட, 15 மலைப் பகுதிகளுக்கு, 7 நாட்களில், 1,600 கி.மீ. தூரம் மோட்டார் பைக்கில் சென்று பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
மேலும் கடந்த, 5 ஆண்டுகளாக, நான் பைக் ரைடராக இருந்து வருகின்றேன். இருந்தும், 7 நாட்கள் தொடர் பயணம் என்பது இது தான் முதல் முறை, எனக்கு இந்த பயணம் மகிழ்ச்சியாக உள்ளது, எனக் கூறினார்.